எஸ்.ஏ. கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலக் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் ஜனவரி 12

எஸ்.ஏ. கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலக் கொண்டாட்டம்

தமிழர்தம் பாரம்பரிய சிறப்பைப் பறைசாற்றும் வண்ணம் சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா மிகச் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் சிறப்பு பட்டிமன்றம், பிரசாந்தின் இசை முருகன் கிராமிய கலைக் குழுவினர் வழங்கும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, தாண்டவம் பரதநாட்டியக் குழு வழங்கும் பரதநாட்டியம், மாணவர்களின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய மணம் கமழும் பாரம்பரிய சமையல் அரங்குகள் என சமத்துவப் பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழாவாக எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முழுவதும் கிராமிய மணம் கமழ்ந்தது. கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா தலைமையில், இயக்குநர் முனைவர் வி. சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோர் முன்னிலையில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகத் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் சினேகன் கலந்து கொண்டு சிறப்பித்தார். தம்முடைய திரைப்படப் பாடல் அனுபவங்கள், வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைத்து அனுபவமே வாழ்க்கையாக முகிழ்க்கிறது என்று குறிப்பிட்டார். தமிழ்த்துறை ஒருங்கிணைத்து நடத்திய இப்பொங்கல் விழாவில் கிராமிய மணம் கமழும் பல்வேறு அரங்குகள், இராட்டினங்கள், பஞ்சு மிட்டாய், சவ்வு மிட்டாய், குதிரை வண்டி, உறியடி என ஒரு கிராமமே எஸ்.ஏ. கல்லூரிக்கு வந்திறங்கியதோ என எண்ணும் அளவுக்குக் கல்லூரி அழகுடன் பரிமளித்தது.