எஸ்.ஏ. கல்லூரியில் மாநில அளவிலான வாகை கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழா மார்ச் 10, 2026
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, மாநில அளவிலான வாகை கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழாவை மார்ச் 10, 2026 அன்று காலை 9 மணிக்குச் சிறப்பாக நடத்தியது. சிறப்பு விருந்தினராகத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலையுரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் சிறப்பு விருந்தினர் முனைவர் ஒளவை அருள் அவர்களை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
மாநில அளவிலான வாகை கலை இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் முனைவர் ஒளவை அருள் அவர்கள் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொற்கிழிப் பரிசையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முனைவர் ஒளவை அருள் அவர்கள் தமிழின் சிறப்புகளை எடுத்தியம்பி, திருக்குறள் முற்றோதலை மாணவர்களிடத்து வலியுறுத்தினார்.
பரிசு பெற்ற மாணவர்கள் உரையும், பாடல்களும் பாடி அவையோரை மகிழ்வித்தனர். கவிஞர் ஆவிச்சி கிருஷ்ணன் அவர்கள், மேடைப் பேச்சு பேசுவதற்கான சில நுணுக்கங்களைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைததார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா, இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, முத்தமிழின் மாண்பையும், மாணவர்களின் பங்களிப்பையும் இந்நிகழ்ச்சி சிறப்பாக விளக்கியது.













